Saturday, May 2

சொல்லாமல் கொல்லும் சர்க்கரை

சொல்லாமல் கொல்லும் சர்க்கரை

நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ், இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.

உலக அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக இந்தியா மாறியிருக்கிறது. உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் நான்கறை கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியர்களின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுவதாக மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.

பெருகிவரும் இந்த சுகாதார நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான தெற்காசிய நாடுகளின் மாநாடு ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்தது.

World Diabetes Foundation எனப்படும் உலக நீரிழிவு நோய் நிறுவனம், சர்க்கரை நோய்க்கான சர்வதேச கூட்டமைப்பு, உலக வங்கி மற்றும் ஐ.நா.மன்றத்தின் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து இந்த சர்வதேச மாநாட்டை நடத்தின.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு சர்வதேச நீரிழிவுநோய் நிபுணர்களும், சுகாதார மேலண்மை வல்லுனர்களும் நீரழிவு நோய் தொடர்பில் இந்தியா சந்தித்துவரும் சவால்கள் குறித்தும், அதனை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் விரிவாக விவாதித்தார்கள்.

பொதுவாகவே வசதிபடைத்த நகர்புறவாசிகளின் நோயாக பார்க்கப்படும் சர்க்கரைநோய், இன்று இந்தியாவின் கிராமப் புறங்களிலும் வேகமாக அதிகரித்துவருவதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இளைய தலைமுறை இந்தியர்களிடம் பெருகிவரும் ஒபிசிடி எனப்படும் உடல் பருமன் என்பது எதிர்காலத்தில் நீரிழிவுநோயின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்று எதிர்வு கூறுகிறார்க நீரிழிவு நோய் நிபுணர்கள்.

நீரிழிவு நோய் குறித்த சரியான புரிதல் மற்றும் அணுகுமுறை இந்தியாவில் உருவாகிவருகிறதா என்பது குறித்தும், நீரிழிவு நோய் தோற்றுவித்திருக்கும் சுகாதார பொருளாதார சிக்கல்கள் குறித்தும் சொல்லாமல் கொல்லும் சர்க்கரை என்கிற இந்த சிறப்புத் தொடரின் அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விட்டால் அவர், தனது வாழ்நாள் முழுமையும் மருந்து மாத்திரைகளை சார்ந்தே உயிர் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்.

இந்த மருந்து மாத்திரைகளை சார்ந்து வாழும் நிலைமை என்பது சர்க்கரை நோயாளிகளுக்கும் அவர் தம் குடும்பங்களுக்கும் மிகப்பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது.

பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய கூடுதல் பொருளாதார சுமையை தாங்க முடியுமா என்பது பலராலும் முன்வைக்கப்படும் முக்கிய கேள்வி.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் கோடிக்கணக்கான ஏழைகளை நீரிழிவு நோய் என்பது மீளமுடியாத பொருளாதார படுகுழியில் தள்ளிவிடும் என்கிற அச்சங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இத்தைகைய ஏழை குடும்பங்களில் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவு என்பது, அவரையும் அவரது குடும்பத்தையும் மட்டுமல்ல, இவரைப்போல் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவின் உற்பத்தி திறனையும் அது பாதிக்கும் என்பது தான் இதில் பொதிந்திருக்கும் உள்ஆபத்து.

சர்க்கரை நோய் மருத்துவ வரலாறு

பதிவு செய்யப்பட்ட மனித வரலாற்றில் சர்க்கரை நோய் குறித்து சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் அறியப்பட்டிருந்ததற்கான பதிவுகள் இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஷ்ருதா என்கிற மருத்துவர் இந்த சர்க்கரை நோய் குறித்த குறிப்பை பதிவு செய்திருக்கிறார்.

இதற்கான வலுவான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டில் தான் உருவானது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம் என்று கண்டறிந்தனர்.

அதுவரை, நீரிழிவு நோய் என்பது மருத்துவ சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியாத நோயாகவே மனிதர்களை அச்சுறுத்திவந்தது.

இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெரிக் பேண்டிங்கின் நினைவை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் மூலம் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சர்வதேச பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், ஐநா மன்றம் இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடியாள சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐநா மன்றம் இப்படி தனியான ஒரு சின்னத்தை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐநா மன்றம் குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மனித உடம்பின் அத்தியாவசியத்தேவைகளில் ஒன்று சர்க்கரை. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளூக்கோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்து மனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் கணையம் என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும்.

கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்றுபோனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான் சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது.

சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை அவரின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.

ஒருவர் உணவு சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில், நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் எழுபது மில்லிகிராம் சர்க்கரை இருக்கும். அதே நபருக்கு சாப்பிட்ட பிறகு, அவருடைய ரத்தத்தில் நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி முப்பது மில்லிகிராம் சர்க்கரை வரை காணப்படும். இந்த அளவுக்கு மேல் ஒருவரின் ரத்தத்தில் சர்க்கரை காணப்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதாக கருதப்படும்.

இந்தியர்களை பெருமளவு தாக்கத் துவங்கியிருக்கும் நீரிழிவு நோயை சர்க்கரை நோய் என்று பொதுப்பெயரிட்டு அழைத்தாலும், சர்க்கரை நோயில் இருபதுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன.

இவற்றில் நான்கு வகையான நீரிழிவு நோயின் உட்பிரிவுகள், அதாவது, முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய், கர்ப்பகால சர்க்கரை நோய், கணையத்தில் ஏற்படும் கற்களால் உருவாகும் சர்க்கரை நோய் என்கிற நான்கு வகையான சர்க்கரை நோய்கள் தான் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை தாக்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் ரக சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் சர்க்கரை நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது.

இந்த முதல் பிரிவு சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை.

மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று கணையத்தை தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்களை முற்றாக அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை கணையம் இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி செல்கள், இன்னொரு பகுதி செல்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை.

ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அதனால், இந்த முதல் ரக சர்க்கரை நோயைப்பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் ஒரே வழி.

அதேசமயம், உலக அளவிலும், இந்தியாவிலும், எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது ரக நீரிழிவுநோய். இந்த இரண்டாவது ரக சர்க்கரை நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளை களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது வகையான கர்ப்பகால சர்க்கரை நோய் சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு சர்க்கரை நோய் மறைந்துவிடும்.

நான்காவது ரக சர்க்கரைநோயை பொறுத்தவரை, கணையத்தில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.

Sunday, March 8

மனித முதல் இனம்

மனித இனம் முதலில் தோன்றிய கடல் கொண்ட குமரிக் கண்டம்

'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று சொல்வார்கள். இப்படி வந்தவர்களை வாழ வைத்ததனால் தானோ என்னவோ தமிழன் தனது இனம், மொழி, கலாச்சார பெருமைகளை மறந்து விட்டான். அதைவிட தான் இழந்த பெருமைகளைப் பற்றி அறிய கூட ஆர்வம் காட்டாதவனாய் இருக்கிறான் என்றால் என்ன சொல்வது ?

தமிழனின் நாகரீகம்....
தமிழனின் மறதியை பயன்படுத்திக் கொண்டு இந்திய வரலாற்றின் பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டன. இந்தியாவை பொறுத்தவரை சிந்து சமவெளி நாகரீகம் தான் மிகவும்பழமையானது என்கிறது வரலாறு. ஆனால் அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது.

ஆம்! குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான். லெமூர் என்றால் பரிணாம வளர்ச்சியில் குரங்கிற்கும், மனிதனுக்கும் இடைப்பட்டவன் என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது.

சிவா நடனம்
குமரியில் கடல் கொண்ட இடம் 49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள். கடல் கொண்ட குமரிக் கண்டத்தின் மேற்கு எல்லை ஆஸ்திரேலியா. கிழக்கு எல்லை ஆப்பிரிக்கா. தெற்கு எல்லை அண்டார்டிகா.

ஒரு காலத்தில் இவை அனைத்தும் ஒன்றாக இருந்திருக்கின்றன. நாளாவட்டத்தில் கடல் கொண்டு அவற்றை பிரித்திருக்கிறது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, மனிதயியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களுக்கும், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடிகளுக்கும் பல ஒற்றுமைகளை கூறுகிறார்கள்.
குறிப்பாக, ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி, கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.

பாட்டி / அவல்
அதுபோல் ஆப்பிரிக்க பழங்குடியினருக்கும், தமிழர்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்கள் குடும்பங்களில் வயதானவர்களை நாம் அழைப்பது போல் 'பாட்டி' என்று அழைக்கிறார்கள். அவல் என்ற பெயரை உபயோகிக்கிறார்கள். நமது மீனவர்கள் நாட்டு படகை தெப்பம், மிதப்பு என்று சொல்வது போல் ஆப்பிரிக்க பழங்குடியினரும் சொல்வது அந்த நாட்களில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்ததற்கான அடையாளம் என்றுஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தாய்மாமன் / அம்மி, உரல்
எனவே ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும், உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாகஇருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்தி ருக்கிறது.

ஆடு மேய்ச்சான் பாறை
ஆடு மேய்ச்சான் பாறை உள்ள இப்போதைய குமரி மாவட்டத்திலும் கூட பல உதாரணங்களை சொல்லலாம். குமரி மாவட்டத்தில் திருமணம் முடித்த தம்பதிகள் 'திரைகாணும் முன் தேரை காணனும்' என்பது மரபு. அதாவது கடலை பார்க்கும் முன்பு சுžந்திரம் தேரைபார்க்க வேண்டும். இதற்கு காரணம் தங்களது முன்னோர்களை கடல் கொண்டு விட்டதால் ஏற்பட்ட ஆத்திரம் என்பது வரலாறு.
குளச்சல் துறை முகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் கடலில் ஒரு சிறிய பாறை தென்படும். இதை 'ஆடு மேய்ச்சான் பாறை' என்று கூறுகிறார்கள். கடல் வழியாக எப்படி ஆடுகளை கொண்டு செல்ல முடியும்? அப்படியென்றால் பல வருடங்களுக்கு முன்பு அந்த இடம் தரையாக இருந்திருக்கும். மக்கள் ஆடுகளை மேய்த்திருப்பார்கள். கடல் கொண்டு விட்ட பின்னரும் இன்னும் ஆடு மேய்ச்சான் பாறை என்றே வழங்குகிறது.

பக்ரூளி ஆறு
குமரிக் கண்டத்தில் பக்ரூளி ஆறு ஓடியதாக வரலாறு. குமரி மாவட்டத்தில் பரளி ஆறு ஓடுகிறது. பக்ரூளி தான் பரளியாக மருவி இருக்கிறது. அதுபோல் பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளமுதல் அணைக்கட்டில் பக்ரூளி ஆறு அணைக்கட்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் ஓடியதன் நினைவாக பரளி ஆறு என்று பெயரிட்டிருக்கலாம். அல்லது இந்த ஆறே அங்கும் ஓடி இருக்கலாம். ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம்.
காரணம், 1960-ம் ஆண்டு கடல் ஆராய்ச்சி செய்யும் போது குளச்சல் பகுதி கடலுக்கு அடியில் மலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். எனவே அது மேற்கு தொடர்ச்சி மலைதான். கடல் கொள்ளுவதற்கு முன் மலை ஆஸ்திரேலியா வரை பரவி இருந்தது என்று கூறப்படுகிறது.

குமரிகோடு
குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு, அதன்கோடு, ஆண்டுகோடு, இடைகோடு, மெக்கோடு, நெட்டன்கோடு, திருவிதாங்கோடு, பரகோடு, வெள்ளைக்கோடு, கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல கண்டங்களில் இருப்பது. குறிப்பாக, ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல்என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நாம் குமரி அம்மனை வணங்குகிறோம். 6-வது நூற்றாண்டில் கம்போடியாவில் குமரி அம்மனை வழிபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

சிலப்பதிகாரத்தில் குமரிக்கண்டம்
குமரிக் கண்டத்தை கடல் கொண்டதற்கான ஆதாரம் சிலப்பதிகாரத்தில் வருகிறது. 'பக்ரூளி ஆற்றுடன் பண்மலை அடுக்கத்து குமரி கோடும் கொடுங்கடல் கொள்ள' என்று தொல்காப்பியர் எழுதுகிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை தமிழனுக்கே உண்டு. உலகில் வேறு எந்த மொழிக்கும் சங்கம் இருந்ததாக வரலாறு இல்லை. முதல் தமிழ்ச் சங்கம் குமரிக் கண்டத்தில் தென் மதுரையில் இருந்ததாக வரலாறு. அதை கடல் கொள்ளவே கபாட புரத்தில் 2-ம் தமிழ்ச் சங்கம் இயங்கியது. இங்குதான் சிலப்பதிகார சம்பவங்கள் நடந்தன. இதை எழுதிய தொல்காப்பியர், அரங்கேற்ற உதவிய அதங்கோடு ஆசான், தற்போதைய குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
எனவேதான் கடல் கொண்டு பல ஓலை சுவடிகள் அழிந்தாலும் 2-ம் தமிழ்ச் சங்க கடைசி காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரம் நமக்கு கிடைத்தது.

ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுமா?
இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும், ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கூட கடலாய செய்தது.
இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலை இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு 38 ஆண்டுகளாக குமரிக் கண்ட கடலாய்வு பணிகள் முடங்கி விட்டன.
கடலாய்வு செய்வதினால் பல அற்புதங்களை பூம்பூகார் நகரம் வெளிப்படுத்தியுள்ளது. அதை விட பல மடங்கு அற்புதங்கள் குமரிக் கண்டத்தில் உள்ளன. இதை கடலாய்வு செய்தால் உலக வரலாறே ஒட்டுமொத்தமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதற்காக நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் எஸ். பத்மநாபன் 30 ஆண்டுகளாக கடலாய்வு செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகள், கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.
கதிரவன், 16 April 1998

எம் ஈழம்




குண்டு வீச்சால் செதரிபோன எம் மக்களை .................?


கால்களை eலந்த எம் சகோதரனை........?






அன்பு தோழர்களே எம் ஈழமக்கள் படும் பாட்டை கொஞ்சம் பார்கள்.